இலங்கை விவகாரம் – நாளை தமிழகத்தில் மாபெரும் ரயில் மறியல் போராட்டம்!!
இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் செப்டம்பர் 21-ம் திகதி (நாளை) தமிழகம் முழுவதும் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பை உலகெங்கும் வாழும் தமிழர்களிடம் நடத்த வேண்டும் என்கிற தமிழக சட்டமன்றத் தீர்மானங்களை இந்திய அரசு நிறைவேற்றக் கோரியும், ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு தாக்கல் செய்ய வலியுறுத்தியும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
காலை 10.00 மணியளவில் இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளதாக தமிழக ஊடகமான நக்கீரன் செய்தி வௌியிட்டுள்ளது.
அத்துடன் ரயில் நிலையங்கள் இல்லாத பகுதிகளில் உள்ள மத்திய அரசின் வங்கிகள், தபால் நிலையங்கள் உள்ளிட்ட அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற உள்ளது என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
Average Rating