அதிபர்!!
கனடாவில் இருந்து இந்தியா வரும் ஜீவன், கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் தொடங்குகிறார். அவருக்கு லீகல் அட்வைசராக இருக்கிறார் ரஞ்சித். ‘நீ என் உடன்பிறவா தம்பி’ என்று சொல்லிச் சொல்லியே, ஜீவனை சதி வலையில் சிக்க வைக்கிறார் அவர். பில்டிங் கட்ட இடம் வாங்கியது முதல், வீடு வாங்குபவர்களுக்கு தொகை நிர்ணயிப்பது வரை ஊழல். இதனால், ஜீவனின் கட்டுமான கம்பெனிக்கு மக்கள் மத்தியில் அவப் பெயர் ஏற்படுகிறது. ஜீவன் கைதாகிறார். தன்னைச் சுற்றி பின்னப்பட்ட சதி வலையில் இருந்து அவர் எப்படி தப்பிக்கிறார்? ரஞ்சித்தின் நம்பிக்கை துரோகத்தை வென்று, மீண்டும் எப்படி நல்ல தொழில் அதிபர் ஆகிறார் என்பது கதை. சில வருட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கிறார் ஜீவன். தன் வேடத்தை நியாயப்படுத்த போராடியிருக்கிறார்.
அம்மா ரேணுகாவிடம் அடி வாங்கியதும் கலங்குவது, இந்தியாவில் தொழில் தொடங்கி முன்னேறுவது, ரஞ்சித்தின் பேச்சில் மயங்குவது, இறுதியில் அந்த துரோகத்தை எதிர்கொள்வது என, நிறைவாகச் செய்துள்ளார். ‘என் அம்மா சொன்னா கூட ஏன், எதுக்குன்னு கேட்பேன். ஆனா, நீ சொன்னா எதுவுமே கேட்காம செஞ்சேன். என்னையாவா ஏமாத்தினே?’ என்று ரஞ்சித்திடம் கலங்குவது, உருக்கம். சண்டைக் காட்சியிலும் பாய்ந்து அடித்திருக்கிறார். ஜீவனின் மனைவியாக வரும் வித்யாவுக்கு நடிக்க வாய்ப்பு குறைவு. என்றாலும், கணவன் மீது விழுந்த பழியை எப்படியாவது துடைக்க வேண்டும் என்ற வெறியில், அதிகாரிகளிடம் முறையிடுவதும், வில்லன் ஆட்களிடம் சிக்கி அடிபடுவதும் பரிதாபம். ரஞ்சித்தின் வில்லத்தனம் ஓ.கே. சிறையில் ஜீவனிடம் பழகி, பிறகு வெளியே வந்ததும் அவருக்கு உதவி செய்து, துப்பாக்கி குண்டுக்கு இரையாகும் சமுத்திரக்கனி, கவனிக்க வைக்கிறார்.
கெட்டவனாக இருந்து நல்லவனாக மாறும் நந்தா மற்றும் தம்பி ராமையா, சி.பி.ஐ அதிகாரியாக வரும் தயாரிப்பாளர் சிவகுமார், சம்பத்ராம், சரவண சுப்பையா, ராஜ்கபூர் கேரக்டர்கள் பரவாயில்லை. கோவை சரளாவை வீணடித்திருக்கிறார்கள்.பிலிப்ஸ் விஜயகுமாரின் ஒளிப்பதிவும், விக்ரம் செல்வாவின் இசையும் கதையின் ஓட்டத்துக்கு உதவியிருக்கிறது. கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலில் இருக்கும் போட்டி, பொறாமை, ஏமாற்றும் தந்திரங்கள் போன்றவற்றை சொல்ல வந்தது நல்ல விஷயம்தான். அதை திரையில் வழங்கியதில் நாடகத்தனம். படம் முழுவதும் நட்சத்திரக் குவியலாக இருப்பது கூட ஒரு விதத்தில் மைனஸ். இதை கவனித்திருந்தால், பேசப்பட்டிருப்பார் இந்த ‘அதிபர்’.
Average Rating