முதல் மந்திரி அதிரடி: முதியவரின் தட்டச்சு இயந்திரத்தை எட்டி உதைத்து சேதப்படுத்திய போலீஸ் எஸ்.ஐ. சஸ்பெண்ட்!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் தலைமை தபால் அலுவலகம் அருகே சாலையோரமாக அமர்ந்து மனு தயாரித்து தரும் முதியவரின் தட்டச்சு இயந்திரத்தை பூட்ஸ் காலால் எட்டி உதைத்து சேதப்படுத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை உடனடியாக பணிநீக்கம் செய்யுமாறு உத்தரவிட்ட உ.பி. முதல் மந்திரி அகிலேஷ் யாதவ், பாதிக்கப்பட்ட முதியவருக்கு அரசு செலவில் புதிய டைப் ரைட்டர் இயந்திரம் வாங்கித் தருமாறும் அறிவுறுத்தினார்.
லக்னோ நகரைச் சேர்ந்த கிருஷ்ண குமார்(65) என்பவர் கடந்த 35 ஆண்டுகளாக இங்குள்ள தலைமை தபால் அலுவலகம் அருகே சாலையோரமாக அமர்ந்து மனு தயாரித்து தரும் தொழில் செய்து வருகிறார். நேற்று அப்பகுதிக்கு வந்த தலைமைச் செயலக காவல் நிலையை சப்-இன்ஸ்பெக்டர் பிரதீப் குமார் என்பவர், பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் அங்கு அமர்ந்து மனு தயாரிக்க வேண்டாம் என்று கிருஷ்ண குமாரை விரட்டியுள்ளார்.
மேலும், அவரது ஒரே தொழில் முதலீடான டைப் ரைட்டர் இயந்திரத்தையும் பூட்ஸ் காலால் எட்டி உதைத்து, உடைத்து, நாசப்படுத்தியுள்ளார். இந்த அநியாயத்தை கண்ட சிலர் அந்த காட்சிகளை தங்களது கைபேசியில் பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர்.
இவ்விவகாரம், உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவ்-வின் கவனத்துக்கு சென்றதும், மனிதநேயமற்ற வகையில் நடந்து கொண்ட அந்த சப்-இன்ஸ்பெக்டரை உடனடியாக சஸ்பெண்ட் செய்யும்படி உத்தரவிட்டார். இதையடுத்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட அந்த சப்-இன்ஸ்பெக்டர் மீது துறைரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட முதியவர் கிருஷ்ண குமாருக்கு உடனடியாக ஒரு புதிய டைப் ரைட்டர் வாங்கித்தருமாறும் அகிலேஷ் குமார் உத்தரவிட்டதையடுத்து, லக்னோ மாவட்ட மாஜிஸ்திரேட் ராஜ்சேகர் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் கிருஷ்ண குமாரின் வீட்டுக்கு சென்று அரசின் சார்பில் புதிய டைப் ரைட்டரை வழங்கினர்.
பொதுமக்களிடம் பழகவேண்டிய நன்நடத்தை தொடர்பாக போலீசாருக்கு உரிய பயிற்சிகளை அளிக்குமாறு மூத்த போலீஸ் அதிகாரிகளை அகிலேஷ் யாதவ் அறிவுறுத்தியுள்ளார்.
Average Rating