தாய்-தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுமியின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்தது உயிர் ஊசல்
தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுமியின் கழுத்தை காற்றாடி மாஞ்சா நூல் அறுத்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை வியாசர்பாடியில் நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- மளிகை வியாபாரி மகள் சென்னை கொருக்குப்பேட்டை, மூப்பனார் நகர், காந்தி நகரைச் சேர்ந்தவர் சேகர். மளிகை வியாபாரி. இவரது மகள் மெர்சி. (வயது 6). அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளிக் கூடத்தில் முதல் வகுப்பு படித்து வருகிறாள். சேகர் தீபாவளிப் பண்டிகையை குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். மாலையில் பெரம்பூரில் உள்ள தனது தம்பி வீட்டுக்கு குடும்பத்துடன் புறப்பட்டார். மாஞ்சா நூல் அறுத்தது தனது மோட்டார் சைக்கிளின் பின் பகுதியில் மனைவியையும், தனக்கு முன் புறத்தில் மகள் மெர்சியையும் அமர வைத்துக் கொண்டு பெரம்பூருக்கு சென்று கொண்டு இருந்தார்.
வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் ரோட்டில் சென்ற போது திடீரென பறந்து வந்த ஒரு காற்றாடியின் மாஞ்சா நூல் மோட்டார் சைக்கிளின் முன்புறத்தில் உட்கார்ந்து இருந்த சிறுமி மெர்சியின் கழுத்தில் பட்டு அறுத்தது. இதனால் வலி தாங்காமல் சிறுமி கதறி துடித்தாள். உடனே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு மகளைப் பார்த்த சேகரும், அவரது மனைவியும் அதிர்ச்சி அடைந்தனர்.
உயிர் ஊசல்
மெர்சியின் கழுத்தில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டு இருந்தது. பதறிப்போன அவர் உடனடியாக ஒரு ஆட்டோ பிடித்து மகள் மெர்சியை எழும்பூரில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தார்.
மெர்சியின் கழுத்து நரம்புகள் அறுபட்டு இருந்ததைப் பார்த்து டாக்டர்கள் உடனடியாக அவளுக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அவள் உள்நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாள். ஆனாலும் அவளது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
20 பேரிடம் விசாரணை
எம்.கே.பி.நகர் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதியில் காற்றாடி விட்ட 20-க்கும் மேற்பட்டவர்களை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.