திருப்பதி கோவில் லட்டு பிரசாதத்தில் இரும்புக்கம்பி: பக்தர் அதிர்ச்சி!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் இரும்புக்கம்பி இருப்பதை கண்டு பக்தர் அதிர்ச்சி அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு செல்லும் பக்தர்கள் கட்டணம் செலுத்தி பிரசாதமாக லட்டு வாங்கிச்செல்கின்றனர். இந்த லட்டுவை பக்தர்கள் புனிதமாக கருதி மற்றவர்களுக்கும் தருகின்றனர்.
ஏழுமலையான் கோவில் லட்டு தயாரிக்கும் பிரிவில் தினமும் லட்சக்கணக்கான லட்டுகள் தயாரிக்கப்படுகிறது. இவை தரமான முறையில் தயார் செய்வதை அதிகாரிகள் உறுதிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்த பக்தர் சீனிவாச ஆச்சார்யலு என்ற பக்தர் ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தார். அவர் லட்டு பிரசாதத்தை வாங்கினார். அதில் ஒரு லட்டில் 3 இரும்புக்கம்பிகள் இருந்ததாக கூறப்படுகிறது. அதனை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தபோது அவர்கள் சரியாக பதில் அளிக்கவில்லை. பின்னர் அவர் அங்கிருந்த நிருபர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். தேவஸ்தான அதிகாரிகளை நிருபர்கள் தொடர்பு கொள்ள முயன்றபோது அவர்கள் இதற்கு பதில் அளிக்க மறுத்து விட்டனர். இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating