10 வயது சிறுவனுக்கு கைவிலங்கு: போலீசாரின் காட்டுமிராண்டித்தனத்துக்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு!!
தெலுங்கானா மாநிலத்தில் திருட்டு வழக்கு தொடர்பாக கைதான பத்து வயது சிறுவனை போலீசார் கைவிலங்கிட்டு அழைத்துவந்த சம்பவம் சமூக ஆர்வலர்கள் மற்றும் மனிதநேயம் மிக்கவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள மேடக் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பத்து வயது சிறுவனை கைது செய்த போலீசார், அவனை நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்து வைத்திருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக சங்காரெட்டி கோர்ட்டில் நேற்று நடைபெற்ற விசாரணையில் ஆஜர்படுத்துவதற்காக அவனை அழைத்துவந்த போலீசார், மீண்டும் சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அழைத்து சென்றபோது, சிறுவனுக்கு கைவிலங்கு மாட்டப்பட்டிருந்ததை கண்ட ஊடகவியலாளர்கள், அந்த காட்சியை படம் பிடித்து வெளியிட்டனர். இந்த காட்சி சில தனியார் தொலைக்காட்சிகளிலும் வெளியாகின.
இந்த காட்சிகளும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களிலும் தீயாக பரவின. இதைக்கண்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் மனிதநேயம் மிக்கவர்கள் இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பத்து வயது சிறுவனை கொடும்குற்றவாளிபோல் போலீசார் நடத்திய சம்பவம் சிறார் நீதியியல் சட்டத்துக்கும், குறிப்பிட்ட சில வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகளுக்கு கைவிலங்கிட்டு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டி நெறிமுறைகளுக்கும் எதிராக நடந்துள்ள இந்த மனித உரிமை மீறல் தொடர்பாக மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Average Rating