200 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சுரங்கத்திற்குள் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் மீட்பு!!
உத்தரப் பிரதேசத்தின் கிராத்பூரில் இருந்து இமாச்சல் பிரதேசத்தின் நெர்சவுக் இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், இமாச்சல் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் மலைகளை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்றது. கடந்த 12-ம் தேதி இதற்கான கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென சுரங்கத்தில் கட்டுமான சாரங்கள் சரிந்து குகை மூடியது. இதில், மணி ராம், சதிஷ் தோமர், ஹிருதய் ராம் ஆகிய 3 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
இவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் (NDRF) தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். 5 நாள் முயற்சிக்கு பிறகு நேற்று சுரங்கத்தில் மணி ராம், தோமர் இருக்கும் இடங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்காக சுரங்கத்தில் துளை போடப்பட்டு, பைப் மூலம் முந்திரி, பாதாம், குளுக்கோஸ் பிஸ்கட் மற்றும் நீர் போன்ற உணவு வழங்கப்பட்டு வந்தது.
சுரங்கத்தில் சிக்கி தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் மீட்பு பணி நடந்த இடத்தில் முகாமிட்டிருந்தனர். இன்று காலை மீட்புப்பணி தொடங்கிய போது அங்கே கைகூப்பியபடி இருந்தவர்களின் பிரார்த்தனை வீண் போகவில்லை.
தொழிலாளர்கள் மீட்க ஜெய்ப்பூர் இருந்து 50 பேர் அடங்கிய சிறப்பு குழு வரவழைக்கப்பட்டது. அவர்கள் கொண்டு வந்த ட்ரில் இயந்திரத்தை பயன்படுத்தி சுரங்கப்பாதை கூரையில் செங்குத்தாக துளையிடப்பட்டு மணி ராம் மற்றும் சதிஷ் தோமர் இருவரும் மீட்கப்பட்டனர். சுரங்கத்திற்குள் சிக்கி இவர்கள் இருவரும் 200 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 9-வது நாள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட மற்றொரு தொழிலாளர் ஹிருதய் ராம் இருக்கும் இடம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
Average Rating