ரோஹன விஜேவீர குடும்பத்திற்கு அரசாங்கம் வீடு வழங்க வேண்டும்!!
ஜனநாயக விரோதமாக 1983ம் ஆண்டு ஜேவிபி தடை செய்யப்பட்ட பின் ஜேவிபி.யிடம் இருந்த காணியுடனான வீடுகளில் ஒன்றை ரோஹன வீஜேவீரவின் மனைவி குடும்பத்தாருக்கு வழங்க வேண்டும் என ஜேவிபி முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 1ம் திகதி தொடக்கம் தற்போதுள்ள கடற்படை முகாம் வீட்டில் இருந்து வெளியேறுமாறு கூறப்பட்டுள்ள செய்தி தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார்.
மூன்று வருடங்களுக்கு முன் ரோஹன வீஜேவீரவின் மனைவி மற்றும் குடும்பத்தாருக்கு கடற்படை முகாமை விட்டுச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு சித்ராங்கனி விஜேவீர எதிர்ப்பு தெரிவிக்கவே அங்கு நீடித்து வசிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
எனினும் சித்ராங்கனி விஜேவீர கடற்படை முகாம் வீட்டில் இருந்து அகற்றப்பட்டால் அவருக்கு ஒருகோடி ரூபா பெறுமதியான வீடு பெற்றுக்கொடுக்க ஜேவிபி மத்தியகுழு தீர்மானித்தது. பெலவத்தையில் உள்ள சுகத் திலகரட்னவின் வீடு அதற்கென ஆராயப்பட்டதாக சோமவன்ச அமரசிங்க குறிப்பிட்டார்.
சித்ராங்கனி விஜேவீரவின் பாதுகாப்பு குறித்து ஜேவிபி கவனம் செலுத்தவில்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை அவர் நிராகரித்துள்ளார்.
1983ம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்த்தன ஜனநாயக விரோதமாக ஜேவிபி.யை தடை செய்ததாவும் 6-7 உறுப்பினர்கள் பாராளுமன்றம் செல்வதை தடுக்கவே தான் அவ்வாறு செய்ததாக பிற்காலத்தில் ஜே.ஆர்.ஜயவர்த்தன கூறியதாகவும் சோமவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜே.ஆர். வழித்தோன்றலில் வந்த இன்றை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, 83ம் ஆண்டுக்குப் பின்னர் ஐதேக அரசாங்கம் எடுத்த அனைத்து தீர்மானங்களுக்கும் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.
Average Rating