துபாயில் இறந்த தமிழர் – சோகத்தில் மனைவி
துபாயில் நடந்த பால விபத்தில் இறந்த தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த மதியழகனின் மனைவி கதறி அழுதபடி சோகத்தில் மூழ்கியுள்ளார். துபாயில் கடந்த சில தினங்களுக்கு முன் புதிதாக கட்டப்பட்ட பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 5 தமிழர்கள் உள்பட 7 இந்தியர்கள் பலியானார்கள். அவர்களில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு காவாரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மதியழகனும் (34) ஒருவர். அவரது உடல் துபாயிலிருந்து விரைவில் இந்தியா கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியழனின் மரணத்தால் அவரது மனைவி பிரியா பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளார். சாப்பிடாமல், தண்ணீர் கூட குடிக்காமல் அழுதபடி உள்ளார். மதியழகன் இறந்தது குறித்து அவர் கூறுகையில், நாங்கள் மிகவும் கஷ்டப்படுகின்ற குடும்பம். அவர் வெளிநாடு போனால் அதிகமாக சம்பாதிக்கலாம். குடும்பம் கஷ்டம் தீரும்னு சொன்னார். அதை நம்பி அவருக்காக வட்டிக்கு பணம் வாங்கி ரூபாய் ஒரு லட்சத்தை ஒரு தனியார் ஏஜென்ஸி மூலம் கட்டி இரண்டு வருட பர்மிட்டில் சென்றார். என்ன வேலை செய்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டால் என்ன வேலை பார்க்கிறேன் என்று சொல்ல மாட்டார். ஒரு முறை போனில் பேசும் போது இங்க வேலை ரொம்ப கஷ்டமா இருக்கு புள்ளன்னு சொன்னார். மாதம் சம்பளமாக ரூ 5000 தான் தருகின்றனர். அதனால் உனக்கு தீபாவளி முடிந்து பணம் அனுப்புகிறேன்னு சொன்னார். பணம் போனால் கூட பரவாயில்லை ஐயா, என் தெய்வமே போய்ட்டுதே. அவரோடு என்னையும் சேர்த்து எரிச்சுடுங்க என்று கூறி கதறி அழுதார்.