உடன்குடி அருகே காரை ஏற்றி தொழிலாளி கொலை!!
உடன்குடி அருகே உள்ள சிதம்பரபுரம் (எ) செட்டிவிளையை சேர்ந்தவர் கொடிமரத்தான் மகன் தங்கபெருமாள் (வயது 36). இவரும், இவரது நண்பர் முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராஜலிங்கம் (42) என்பவரும் தென்னந்தோப்புகளை குத்தகை எடுத்து தேங்காய் பறித்து விற்பனை செய்து வந்தனர்.
நேற்று முன்தினம் முத்துகிருஷ்ணாபுரம் வந்த தங்கபெருமாள் இரவு 11 மணியளவில் மெயின்ரோட்டில் நின்று ராஜலிங்கத்துடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த செட்டிவிளையை சேர்ந்த ஜெகன் (27) என்ற வாலிபர் அவர்கள் மீது மோதினார். இதில் தங்கபெருமாள் படுகாயம் அடைந்து கீழே விழுந்தார். லேசான காயம் அடைந்த ராஜலிங்கம் அங்கிருந்து தப்பி ஓடினார்.
அப்போதும் ஆத்திரம் அடங்காத ஜெகன் அரிவாளை எடுத்துக் கொண்டு ராஜலிங்கத்தை விரட்டி சென்று வெட்டினார். பின்னர் காரை அங்கேயே விட்டு விட்டு ஜெகன் தப்பி விட்டார். இதில் படுகாயம் அடைந்த தங்கபெருமாள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் இறந்தார். ராஜலிங்கம் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து குலசேகரபட்டினம் போலீஸ் வழக்கு பதிவு செய்தனர். கொலையாளியை பிடிக்க திருச்செந்தூர் டி.எஸ்.பி. கோபால் தலைமையில் குலசேகரபட்டினம் இன்ஸ்பெக்டர் மீனாட்சி நாதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் ஜெகன் உறவினர் வீடுகளில் நேற்று முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் அவர் போலீசாரிடம் சிக்கவில்லை. இதனால் ஜெகன் கோவைக்கு தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். எனவே தனிப்படை போலீசார் ஜெகனை தேடி கோவை விரைந்துள்ளனர்.
Average Rating