ஏட்டைக் கடித்துக் குதறிய மன நலம் பாதித்த பெண்
நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் காவல் நிலையத்தில் புகுந்த பெண், அங்கிருந்த தலைமைக் காவலரை கடித்துக் குதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தனது ஜாக்கெட்டையும் கிழித்து எறிந்து அவர் ரகளை செய்தார். நாகை மாவட்டம், கொள்ளிடம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிபவர் கலியபெருமாள். காவல் நிலையத்தில் இவர் பணியில் இருந்த போது 30 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் அங்கு வந்தார். புகார் கொடுக்க வருவதாக நினைத்த ஏட்டு, என்ன வேண்டும் என அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார். ஆனால் அந்த பெண் தான் அணிந்து இருந்திருந்த ஜாக்கெட்டை தாறுமாறாக கிழித்தெறிந்தார். இதைக் கண்டு ஏட்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஏட்டு என் கையை பிடித்து இழுக்கிறான், கற்பழிக்க போறான் என கூச்சல் போட்டார். இதனால் அதிர்ந்து போன ஏட்டு, தப்பித்தால் போதும் என காவல் நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது அந்த பெண் ஏட்டு கலியபெருமாளின் வலது கை மணிக்கட்டை கடித்து விட்டார். இதனால் வலியால் துடித்த ஏட்டு ஒரு வழியாக தப்பி வெளியே ஓடி வந்தார். பின்னர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் போலீஸார் அந்தப் பெண்ணைப் பிடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், அவரது பெயர் மாலதி என்றும், அவர் கீழ மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், தெரியவந்தது. அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த பெண்ணை நாகை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்துள்ளனர்.