திண்டுக்கல் கோர்ட்டு அருகே பிரபல ரவுடியை வெட்டி கொன்ற 4 பேர் கும்பல் கைது!!
திண்டுக்கல் முருகபவனம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராஜா என்ற சேசுராஜ் (வயது 32). இவர் மீது கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளார்.
கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜராக நேற்று வந்தார். கோர்ட்டில் ஆஜராகி விட்டு வெளியே வந்த போது 4 பேர் கொண்ட கும்பல் இவரை ஓட ஓட விரட்டியது. உயிருக்கு பயந்து கோர்ட்டுக்குள் நுழைய முயன்றார். ஆனாலும் கொலை வெறி கும்பல் சேசுராஜை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். பட்ட பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசார் விசாரணையில் பழிக்கு பழியாக சேசு ராஜ் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இது குறித்து நகர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தீப்பாச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சரவணக்குமார் (26), செல்லாண்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அமுதவேல் (27), முருகபவனத்தை சேர்ந்த அருளானந்த பீட்டர் (25), இவரது சகோதரர் செபஸ்தியான் (27) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். போலீசில் அவர்கள் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:–
ராம்குமார், சேசு ராஜ், ஜான்பீட்டர் உட்பட நாங்கள் அனைவரும் ஆரம்பத்தில் ஒன்றாகவே சுற்றி வந்தோம். லோடுமேன் உள்பட கிடைக்கும் வேலைகளை செய்து வந்தோம். இது தவிர வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு கிடைக்கும் பணத்தை எங்களுக்குள் பங்குபோட்டுக் கொள்வோம்.
அவ்வாறு பங்கு பிரிப்பதில் எங்களுக்குள் முன் விரோதம் ஏற்பட்டது. இதனால் எங்களுடன் இருந்த ராம்குமாரை சேசுராஜ் மற்றும் அவரது நண்பர்கள் கொலை செய்தனர். இதற்கு பழிக்கு பழி வாங்க இவ்வழக்கில் தொடர்புடைய சேசுராஜை கொலை செய்ய திட்டம் தீட்டி எங்கள் ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டோம்.
இவ்வாறு வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளனர்.
Average Rating