ஒடிசாவில் பரபரப்பு: குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கழுத்தை அறுத்து மர்ம கொலை!!
ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற பள்ளி ஆய்வாளர், அவரது மனைவி மற்றும் அவர்களின் இரு பெண் குழந்தைகள் கழுத்தை அறுத்து மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களை ஆய்வு செய்யும் கல்வித்துறை அதிகாரியாக பணியாற்றி, ஓய்வுபெற்ற தீனபந்து மாலிக்(65) என்பவர், பூரி மாவட்டத்தில் உள்ள நகாரா கிராமத்தில் தனது மனைவி நிர்மலா மற்றும் மகள்கள் சாஸ்வதி(13) பிரனதி(7) ஆகியோருடன் வசித்து வந்தார்.
நேற்று முழுவதும் அவர்களின் வீடு உள்புறமாக தாழிட்டபடி இருந்தது. மாலைவரை வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகப்பட்ட அக்கம்பக்கத்து வீட்டினர், தீனபந்துவின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து, திறந்துகொண்டு உள்ளே சென்று பார்த்தனர். படுக்கை அறையில் அந்த கோரக்காட்சியை கண்ட அனைவரும் பீதியில் உறைந்துப் போய் நின்றனர்.
தீனபந்து மாலிக், நிர்மலா, சாஸ்வதி, பிரனதி ஆகிய நால்வரும் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அறையின் சுவர்களில் ரத்தம் தெளித்து கிடந்தது. இதுதொடர்பாக கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார், நான்கு பிரேதங்களையும் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த படுகொலையில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், கொலையின் பிண்ணனி என்ன? கொலையாளிகள் யார்? என்பது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating