இலங்கையை இந்திய அரசு கடுமையாக கண்டிக்க வேண்டும்!!
இந்திய மத்திய அரசு மீனவர் பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசுடன் சம்பிரதாயத்திற்காக பேசுவதை கைவிட்டு, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒரு காலக்கெடுவிற்குள் இப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தித்தர வேண்டும் என, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தமிழகத்தின் நாகப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த 21–ம் திகதி மீன்பிடிக்கச் சென்ற 15 மீனவர்களை இலங்கை கடற்படை அச்சுறுத்தி, அவர்களது மீன்பிடிச் சாதனங்களை சேதப்படுத்தி, கைது செய்து, அவர்களது இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
மேலும் தமிழகத்தின் இராமேசுவரம் பகுதியை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுமார் 150 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் நம் மீனவர்களின் மீது அச்சுறுத்தும் வகையில் தாக்குதல்கள் நடத்தி, இனி இப்பகுதிக்கு மீன்பிடிக்க வரக்கூடாது என மிரட்டல் விடுத்து, மீனவர்களின் மீன்பிடி வலைகளை சேதப்படுத்தினர்.
இப்பகுதியில் தொடர்ந்து மீன்பிடித்தீர்கள் என்றால் உங்கள் அனைவரையும் கைது செய்வோம் என்றும் மிரட்டியுள்ளனர். இலங்கை கடற்படையின் இது போன்ற தொடர் தாக்குதல்களும், அச்சுறுத்தல்களும், கைது நடவடிக்கையும் மிகுந்த கண்டிக்கத்தக்க செயலாகும்.
தற்போது தான் இலங்கைப் பிரதமர் இந்தியா வந்து சென்றார். அப்போது மீனவர் பிரச்சினைக்கு சுமூக தீர்வு ஏற்படுத்த இரு நாட்டு பிரதமர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை நடந்து ஒரு வார காலத்திற்குள் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அச்சுறுத்துவதையும், கைது செய்வதையும் இந்திய மத்திய அரசு கடுமையாக கண்டிக்க வேண்டும்.
இதுவரை இலங்கையால் சிறைப்பிடிக்கப்பட்ட 15 மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்து, தற்போது பறிமுதல் செய்த இரு படகுகள் மற்றும் ஏற்கனவே இலங்கை வசம் இருக்கும் 26 படகுகள் என மொத்தம் 28 படகுகளையும் திரும்ப ஒப்படைக்குமாறு இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும்.
மத்திய அரசு இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தை நிறுத்துவதற்காக சம்பிரதாயத்திற்காக அந்நாட்டு அரசோடு பேசுவதையும் கைவிட்டு, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒரு காலக்கெடுவிற்குள் இப்பிரச்சினைக்கு நிரந்தர, சுமூகத் தீர்வு ஏற்படுத்தி தரவேண்டும்.
தமிழக மீனவச் சமுதாய மக்களின் மீன்பிடித் தொழில் நிம்மதியாக தொடர, ஒரு நல்ல சூழலை ஏற்படுத்தி தர மத்திய அரசுக்கு தமிழக அரசு மேலும் அழுத்தம் கொடுத்து மீனவர்கள் நலன் காத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Average Rating