அடித்துக் கொல்லப்பட்ட 2 கொள்ளையர்கள் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!!
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஓரகடம், தேவரியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி. விவசாயி.
நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டுக்குள் புகுந்த 2 கொள்ளையர்களை அப்பகுதி மக்கள் அடித்து கொன்றனர். ஒருவன் ரூ.3½ லட்சம் ரொக்கம் மற்றும் 30 பவுன் நகையுடன் தப்பி ஓடி விட்டான்.
கொள்ளையர்கள் வெட்டியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விசாரணையில் அடித்துக் கொல்லப்பட்ட 2 கொள்ளையர்களும் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அண்ணன், தம்பியான ராஜேந்திரன் – பெரியசாமி என்பதும், தப்பி ஓடியவன் அவர்களது கூட்டாளியான கள்ளக்குறிச்சியை அடுத்த கொண்டலம் பாளையத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பது தெரிந்தது.
இறந்து போன 2 கொள்ளையர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று மாலை பிரேத பரிசோதனை முடிந்து ராஜேந்திரன் உடல் மனைவி லதாவிடமும், பெரிய சாமியின் உடல் அவரது மனைவி பார்வதியிடமும் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது அவர்களுடன் உறவினர்கள் சிலரும் வந்து இருந்தனர். அவர்கள் 2 பேரின் உடல்களையும் சொந்த ஊருக்கு எடுத்து சென்றனர்.
கொலையுண்ட கொள்ளையர்கள் 2 பேரும் சொந்த ஊரில் கொள்ளையடித்த பணத்தில் பல ஏக்கர் நிலத்தை வாங்கி குவித்து உள்ளனர். அவர்கள் மீது கள்ளக்குறிச்சி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 100–க்கும் மேற்பட்ட கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.
தப்பி ஓடிய கொள்ளையன் மாணிக்கம் இதுவரை சிக்கவில்லை. அவனை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இறந்து போன பெரியசாமியிடம் இருந்து செல்போன் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்து இருப்பதாக தெரிகிறது.
அதில் உள்ள நம்பர்களை வைத்து மாணிக்கம் பதுங்கி உள்ள இருப்பிடம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
Average Rating