மணல் அள்ளியதை தட்டிக்கேட்டதால் வாலிபரை தாக்கிய 10 பேர் கைது!!
திருப்பூர் அருகே புதுப்பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஆற்றிரல் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை மீறி சிலர் மணல் அள்ளினர். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பிரபாகரன் என்பவர் தட்டிக் கேட்டார். இதனால் பிரபாகரன் தாக்கப்பட்டார்.
மேலும் அவர் மீது போலீசில் பெட்ரோல் குண்டு வீசியதாக புகார் அளிக்கப்பட்டது. புகாரையடுத்து திருப்பூர் போலீசார் பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் உண்ணாவிரதம் இருந்த பிரபாகரனுக்கு ஆதரவாக பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து போலீசார் பிரபாகரன் மீதான வழக்கை வாபஸ் பெற்றனர்.
இந்தநிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று பிரபாகரன் திருப்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை அக்டோபர் 6–ந் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கை எடுத்து பல்வேறு கட்ட விசாரணைகள் நடத்தினர்.
இந்தநிலையில் நேற்று இரவு பிரபாகரனை தாக்கியதாக 10 பேரை கைது செய்தனர். அவர்கள் குறித்த பெயர் விவரங்களை போலீசார் வெளியிட வில்லை. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating