பஸ் மோதி கணவன்மனைவி பலி
பைக்கில் சென்றபோது அரசு பஸ் மோதி கணவன்மனைவி இருவரும் பலியானார்கள். இந்த சோக சம்பவம் குறித்து கூறப்படுவதாவது: கணடமங்கலம் ஒன்றியம் பாலப்பாடி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 33). இவர் புதுச்சேரியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கலைவாணி (வயது 30). இவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் அருகே உள்ள கண்டமானடியில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக வந்து கொண்டிருந்தனர். முண்டியம்பாக்கம் வழுதாவூர் கூட்டுரோடு அருகே வந்தபோது விழுப்புரத்தில் இருந்து சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கலைவாணி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த சங்கரை உடனடியாக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவரும் பரிதாபமாக இறந்தார். விபத்தில் பலியான சங்கர்கலைவாணிக்கு தமிழரசன் (வயது 5), சுரேஷ்குமார் (வயது 4) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப் பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் பாபநாசத்தைச் சேர்ந்த முருகவேல் (வயது 37) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.