மண்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்வு (வீடியோ)!!
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கொத்மலை பிரதேசசபைக்குட்பட்ட கொத்மலை – ரம்பொடை வெதமுல்ல பிரிவு லிலிஸ்லேண்ட் (கயிறுகட்டி) தோட்டத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களது சடலங்கள் கொத்மலை வைத்தியசாலையில் இருந்து பிரேதப் பரிசோதனைக்காக நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மீட்பு பணியாளர்களால் நேற்று இரவு வரை 6 சடலங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை இரண்டு வயதுடைய சிறுமி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த லோகநாயகி (48 வயது), காந்திமதி (23 வயது), புவனா (6 வயது), லட்சுமி (67 வயது), சுபானி (9 வயது), மனோஜ் (4 வயது), ரூபினி (2 வயது) ஆகியோரே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
மேலும் இரு கால்களும் உடைந்த நிலையில் செல்லையா கணேசன் (வயது 55) என்பவர் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரியவருகிறது.
இவ் அனர்த்தத்தில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (25) பிற்பகல் 02.45 அளவில் இடம்பெற்ற இந்த பாரிய மண்சரிவில் 7 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பாராங் கற்களுடன் கூடிய மண், வீடுகளை உடைத்துக்கொண்டு முன்பக்கமாக வந்திருக்கின்றன.
மண்சரிவு அபாயத்தினால் குறித்த பகுதியில் உள்ள 45 குடும்பங்களைச் சேர்ந்த 188 பேர் இடம்பெயர்ந்து இறம்பொடை இந்து கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அவர்களுக்கான நிவாரண உதவிகளை நுவரெலியா மற்றும் கொத்மலை பிரதேச சபைகள் முன்னெடுத்து வருகின்றன.
அத்தோடு, மண்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு அண்மித்த பகுதியில் உள்ள பாரிய மண்மேடு சரிந்துவிழும் ஆபத்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating