மூன்று பெண்கள் கைது
ரெயில் மூலம் ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பெண்கள் சென்ட்ரல் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 30 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து கூறப்படுவதாவது: சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் கருடாத்திரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்தது. அப்போது சென்ட்ரல் ரெயில்வே போலீசாருக்கு ஒரு தகவல் வந்தது. அந்த ரெயிலில் ரேஷன் அரிசி மூட்டைகள் ஆந்திராவுக்கு கடத்தப்பட இருப்பதாக கூறப்பட்டது. இதனை அடுத்து ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் அந்த ரெயிலில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது பயணிகளின் இருக்கைகளின் கீழே 30 ரேஷன் அரிசி மூட்டைகளை மறைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தேசம்மாள் (வயது 35), முனியம்மாள் (வயது 55), சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த பாப்பம்மாள் (வயது 50) ஆகிய 3 பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் சென்னையில் ஒரு கிலோ ரேஷன் அரிசியை இரண்டு ரூபாய்க்கு வாங்கி ஆந்திராவுக்கு எடுத்துச் சென்று அங்கு நான்கு ரூபாயும், அதற்கு கூடுதலான விலையிலும் விற்று வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.