மீண்டும் வீட்டுக் காவலில் பெனாசிர்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ மீண்டும் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். 7 நாட்கள் பெனாசிர் லாகூரில் தான் தங்கியிருக்கும் வீட்டை விட்டு வெளியேற கூடாது என்று போலீசார் உத்தரவிட்டுள்ளனர். பாகிஸ்தானில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து லாகூரிலிருந்து இஸ்லாமாபாத் நோக்கி பெனாசிர் நடத்த திட்டமிட்டுள்ள பேரணியை தடுக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீட்டுக் காவலில் அடைக்கப்படும் உத்தரவை அவரிடம் அளிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் பெனாசிரை சந்திக்க இயலவில்லை என்றும் லாகூர் காவல் துறை உயரதிகாரி அப்தாப் சீமா தெரிவித்துள்ளார். லாகூரில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஒருவரின் வீட்டில் தங்கியிருக்கும் பெனாசிர் புட்டோ வீட்டை விட்டு வெளியேற கூடாது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெனாசிர் தங்கியுள்ள வீட்டைச் சுற்றி 150 போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.