அடர்ந்த காட்டிலுள்ள குகையில் இருந்து சிறுமி மீட்பு! நடந்தது என்ன?
வீட்டில் இருந்து காணாமல் போன மூன்றறை வயது சிறுமி ஒருவர் 12 மணித்தியால தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர், அடர்ந்த வனப் பகுதியிலுள்ள கற்குகையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக, கருவலகஸ்வெவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கருவலகஸ்வெவ – பஹரிய பகுதியைச் சேர்ந்த தினிதி அசன்ஸா என்ற சிறுமியே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (29) மாலை 03.30 அளவில் குறித்த சிறுமி திடீரென காணாமல் போயுள்ளார். இதனையடுத்து பிரதேச மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து சிறுமியை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதேவேளை சிறுமி சென்ற புனிதத் தலத்தில் விசாரித்தபோது, அவர் தனியாக அடர்ந்த காட்டிலுள்ள கல்குகையில் இருப்பதாகவும், அப் பகுதியால் செல்லும் பெண்கள் பேசினால் மட்டும் அவர் வௌியே வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி சிறுமி இருப்பதாக கூறப்பட்ட கல் குகையை பொலிஸார் உள்ளிட்ட தேடுதல் பணியில் ஈடுபட்டவர்கள் இன்று காலை 03.30 அளவில் சென்றடைந்துள்ளனர்.
தேடும் குழுவில் இருந்த பெண்கள் சிறுமியின் பெயரைக் கூறி பேசிய போதே கல் குகையில் இருந்து அவர் வௌியே வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்தவர்கள் குறித்த குகையை சோதனையிட்டபோது அங்கு வேறு யாரும் இருக்கவில்லை, யாரும் இருந்ததற்கான தடயங்களும் கிடைக்கப் பெறவில்லை.
எதுஎவ்வாறு இருப்பினும் சிறுமிக்கு தான் எவ்வாறு அங்கு கொண்டுவரப்பட்டார் என்பது குறித்து எந்தத் தகவலையும் தெரிவிக்க முடியவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை மீட்கப்பட்ட சிறுமி வைத்தியப் பரிசோதனைகளுக்காக புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating