20 ஆயிரம் வக்கீல்கள் கைது
பாகிஸ்தானில் 20 ஆயிரம் வக்கீல்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு முன்னணி வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தை சேர்ந்த முகமது ஷேக் எனும் வழக்கறிஞர், லண்டன் மற்றும் வாஷிங்டனில் முஷாரப்புக்கு எதிராக ஆதரவு திரட்டி வருகிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தானில் அவசர நிலை அமல் செய்யப்பட்ட பிறகு இதுவரை 20 ஆயிரம் வழக்கறிஞர்கள் சிறையில் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த செய்தி சர்வதேச பத்திரிகைகளில் வெளியாவதில்லை என்று கூறிய அவர், முஷாரப்பை எதிர்க்கும் அனைத்து வக்கீல்களும் கைது செய்யப்படுவதாக கூறியுள்ளார். ஒரு சில இடங்களில் வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த அனைத்து வக்கீல்களும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பாகிஸ்தானில் ஜனநாயக ஆதரவு இயக்கத்தை வழக்கறிஞர்கள் முன்னின்று நடத்தி வருவதால் இப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.