புலிகளுடன் தொடர்பு: 4 பேர் கைது
விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 4 பேர் ராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டனர். விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். எனவே, இந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 4 பேர் ராமேஸ்வரத்தில் கடந்த மாதம் 23ந் தேதி கைது செய்யப்பட்டனர். காண்டீபன், குகனேஸ்வரன், சுதர்சன் மற்றும் இளையராஜா என்ற அந்த 4 பேரையும் படகு ஒன்றில் இருந்ததை இந்திய கடற்படையினர் கண்டுபிடித்தனர். பின்னர் அவர்களை ராமேஸ்வரம் கோவில் காவல்நிலைய போலீசாரிடம் விசாரணைக்காக கடற்படையினர் ஒப்படைத்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்களுக்கும், தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, அரசு உத்தரவின் அடிப்படையில் அந்த 4 பேரும் செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.