தஞ்சையில் ரெயில்வே ஊழியர் வீட்டில் பெண்களை கட்டையால் தாக்கி 21½ பவுன் கொள்ளை…!!
தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை லெட்சுமி புரத்தில் வசித்து வருபவர் சேகர் (54). இவர் திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி சரஸ்வதி. இவரது வீட்டில் சேகரின் தங்கை ஜெயலெட்சுமி அவரது மகன் சுந்தர பாண்டியன், மகள் கீர்த்தனா ஆகியோர் தங்கி இருந்தனர்.
நேற்று இரவு சேகர் வீட்டின் மேல் மாடி அறையில் படுத்து தூங்கினார். சுந்தர பாண்டியன் கீழ் தளத்தில் தனி அறையில் படுத்திருந்தார்.
மற்றொரு அறையில் சரஸ்வதி, ஜெயலட்சுமி, கீர்த்தனா மற்றும் சேகரின் மருமகள் ஜெயலட்சுமி ஆகிய 4 பெண்கள் படுத்து இருந்தனர்.
நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு வீட்டின் பின் பக்க இரும்பு கதவை உடைத்து கொண்டு 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல் அங்கு வந்தது. அவர்கள் முகமூடி, டவுசர் அணிந்து இருந்தனர். கையில் உருட்டுக்கட்டை மற்றும் கத்தி வைத்திருந்தனர்.
வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த அக்கும்பல் சுந்தர பாண்டியன் படுத்திருந்த அறை கதவை வெளிப்பக்கம் பூட்டினார்கள்.
பின்னர் பெண்கள் படுத்திருந்த அறைக்கு சென்ற கொள்ளை கும்பல் அவர்களிடம் இருந்த நகைகளை பறிக்க முயன்றது. அவர்கள் சத்தம் போட முயன்றனர்.
இதில் ஆத்திரம் அடைந்த அக்கும்பல் சரஸ்வதி, அவரது மருமகள் ஜெயலட்சுமியை உருட்டுக் கட்டையால் தாக்கினர். மேலும் கத்தியை காட்டி மிரட்டியது. இதனால் பெண்கள் பயந்தனர்.
இதனை பயன்படுத்தி கொண்ட அக்கும்பல் சரஸ்வதி அவரது மருமகள் ஜெயலட்சுமி மற்றும் கீர்த்தனா ஆகியோர் அணிந்திருந்த 21½ பவுன் நகைகளை பறித்தனர்.
நகையை பறிக்கும் போது சரஸ்வதி, அவரது மருமகள் ஜெயலட்சுமிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. பின்னர் அக்கும்பல் அங்கிருந்து சென்று விட்டது.
இந்த துணிகர கொள்ளை குறித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீசில் புகார் செய்யப்பட்டது. தஞ்சை டவுன் டி.எஸ்.பி. தமிழ்செல்வன், இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய தாஸ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். மேலும் தடயவில் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating