திருட்டு விசிடி பறிமுதல்
தீபாவளிக்கு வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் “அழகிய தமிழ்மகன்’, “வேல்’ உட்பட 4,400 புதுப்பட திருட்டு விசிடிக்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுப்பட திருட்டு விசிடிக்கள் பர்மா பஜார் பகுதியில் விற்கப்படுவதாக மத்திய குற்றப்பிரிவு துணைக் கமிஷனருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து உதவிக் கமிஷனர் விமலா, இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்இன்ஸ்பெக்டர்கள் சிவபாலன் மற்றும் வரதராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பர்மா பஜார், மின்ட் தெரு ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது தீபாவளிக்கு வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் புதிய திரைப்பங்களான “அழகிய தமிழ்மகன்’, “வேல்’ மற்றும் “பசுபதி’, “தவம்’, “மருதமலை’, “நம்நாடு’, “உற்சாகம்’, “மலைக்கோட்டை’, “தமிழ் எம்.ஏ’, “சத்தம்போடதே’ போன்ற படங்களும் ஆபாச சிடிக்கள் உட்பட மொத்தம் 4,375 திருட்டு விசிடிக்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மொத்த மதிப்பு 2 லட்சமாகும்.
இது தொடர்பாக செங்குன்றத்தை சேர்ந்த துரை (வயது 36) அஸ்தினாபுரத்தை சேர்ந்த சையது முகமது (வயது 28) பொன்னேரியை சேர்ந்த ஜாகீர் உசேன் (வயது 35) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை இந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட சிடி மற்றும் விசிடிகளின் மதிப்பு 8 கோடியே 36 லட்சம் ஆகும்.
இந்த திருட்டு விசிடிக்கள் மற்றும் டிவிடிகளை பிடிக்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என துணைக் கமிஷனர் தர்மராஜ் தெரிவித்துள்ளார்.