இந்திய சூப்பர் கம்ப்யூட்டர்
உலகின் அதிவேகமான சூப்பர் கம்ப்யூட்டர்களின் பட்டியலில் இந்திய சூப்பர் கம்ப்யூட்டருக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. டாடா நிறுவனத்திற்கு சொந்தமான ஆய்வுக் கூடம் சார்பில் உருவாக்கப்பட்ட சூப்பர் கம்ப்யூட்டர் 4வது இடத்தை பிடித்துள்ளது. சாதாரண கம்ப்யூட்டர்களை விட பல மடங்கு ஆற்றல் கொண்ட, நொடிக்கு பல கோடி கணக்குகளை போடும் திறன் கொண்ட கம்ப்யூட்டர்கள் சூப்பர் கம்ப்யூட்டர்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பொதுவாக பல்கலைக்கழகங்கள், ஆய்வுக் கூடங்கள் மற்றும் ராணுவம் சார்பில் பயன்படுத்தப்படுகின்றன. சூப்பர் கம்ப்யூட்டர்களின் செயல் திறன் அடிப்படையில், அவ்வப்போது வேகமாக செயல்படும் சூப்பர் கம்ப்யூட்டர்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது. அமெரிக்காவில் தொடங்கியுள்ள சூப்பர் கம்ப்யூட்டர்கள் மாநாட்டில் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய நிறுவனமான டாடாவுக்கு சொந்தமான கம்ப்யூடேஷனல் ரிசர்ச் லேப் எனும் ஆய்வுக் கூடம் உருவாக்கிய ஏகா எனும் கம்ப்யூட்டர் 4வது இடத்தை பிடித்துள்ளது. சூப்பர் கம்ப்யூட்டர் பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் இந்திய கம்ப்யூட்டர் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்த பட்டியலில் ஐபிஎம் நிறுவனத்தின் புளூஜீன் கம்ப்யூட்டர் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.