தெலுங்கானாவில் ஆசிரியர்கள் அவமானப்படுத்தியதால் 15 வயது மாணவன் தற்கொலை..!!
தெலுங்கானா மாநிலத்தில், பள்ளிக் கட்டணம் செலுத்தாததை ஆசிரியர்கள் கண்டித்ததால் மனமுடைந்த 15 வயது மாணவன் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ செய்தி கிடைத்துள்ளது.
கரீம்நகர் மாவட்டம் பெட்டாபள்ளி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்த அந்த சிறுவன், பள்ளியில் கட்டண பாக்கி வைத்துள்ளான். ஏழ்மை நிலையில் உள்ள அவனது பெற்றோரால் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பணத்தை கட்ட முடியவில்லை. இதனால், கடந்த புதன்கிழமை அந்த மாணவனையும், பிற 6 மாணவர்களையும் வகுப்பறையில் இருந்து வெளியேற்றி நிற்க வைத்துள்ளனர். இதனால் அவமானமடைந்த அந்த மாணவன், வீட்டுக்கு வந்ததும் தற்கொலைக்கான காரணத்தை செல்போன் வீடியோவில் பார்க்கும்படி எழுதி வைத்துவிட்டு, ரெயில் முன் விழுந்து இறந்துவிட்டான்.
மகன் காணாமல் போய்விட்டதாக அவனது பெற்றோர் நேற்று போலீசில் புகார் அளித்த பிறகுதான் இந்த தகவல் அனைத்தும் தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Average Rating