தஞ்சை அருகே மின்சாரம் தாக்கி கணவன்–மனைவி பலி..!!
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருச்சடை விளந்தை காலனி தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 55). இவரது மனைவி நீலாவதி (50). தியாகராஜன் செங்கல்சூளையில் வேலை செய்து வந்தார். நேற்று இரவு மழை பெய்ததால் செங்கல்சூளைக்கு சென்று செங்கல்களை மூடி வைக்க சென்றார்.
அப்போது மோட்டார் பம்புசெட்டுக்கு செல்லும் மின்கம்பி அறுந்து கிடந்தது. அதனை அவர் மிதித்து விட்டதால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த நிலையில் செங்கல்சூளைக்கு சென்ற கணவர் திரும்பி வராததால் நீலாவதி இன்று காலை செங்கல்சூளைக்கு சென்றார். அங்கு கணவர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரை தூக்க முயன்றார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் நீலாவதியும் இறந்தார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் திருக்காட்டுப்பள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான கணவன்–மனைவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான தம்பதிக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.
மின்சாரம் தாக்கி கணவன்–மனைவி பலியான சம்பவம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating