அமெரிக்கப் பள்ளியில் சிறந்த மாணவன் விருதைப் பெற்ற பூனை…!!
அமெரிக்காவில் தினந்தோறும் பள்ளிக்கு வந்து பாடங்களை கவனிக்கும் பூனைக்கு சிறந்த மாணவன் விருது வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சான் ஜோஸ் நகரைச் சேர்ந்தவர் ஆம்பர் மரியந்தால் என்ற பெண், கடந்த 2009-ம் ஆண்டு பூபா என்ற பூனையை தத்தெடுத்துள்ளார். அவரது மகன்கள் மேத்யூ, மார்க் ஆகியோர் அந்த பகுதியிலுள்ள லேலேண்ட் உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள்.
வீட்டின் அருகில் உள்ள லேலேண்ட் பள்ளிக்கு அவர்கள் இருவரும் நடந்தே செல்வது வழக்கம். இந்நிலையில், பூபாவும் வீட்டில் இருக்காமல் தினமும் இவர்களுடன் பள்ளிக்கு செல்ல தொடங்கியது. அவர்களுடன் வகுப்பறைகளில் அமர்ந்து பாடத்தை கவனிக்க ஆரம்பித்தது.
நாளடைவில் படிப்பு மிகவும் பிடித்துப்போக, தற்போது பள்ளி திறக்கும் முன்பு முதல் ஆளாக அங்கு சென்று வாசலில் காத்துக் கொண்டிருக்கிறதாம். இது தொடர்கதையாகி விட்டதால் பள்ளி நிர்வாகத்தினரும் பூபாவை விரட்டுவது கிடையாது. மேத்யூ, மார்க்குடன் நட்பு பாராட்டுவது போலவே, மற்ற மாணவர்களிடமும் பூபா விளையாடி மகிழ்கிறது. இதனால் பள்ளி வளாகத்தில் பூபாவிற்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
சமீபத்தில், பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, அடையாள அட்டைக்காக புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அப்போது பள்ளி வளாகத்தில் சுற்றிக் கொண்டிருந்த பூபாவுக்கு முதல் அடையாள அட்டையை வழங்கியுள்ளனர். கடந்த வருடத்திற்கான சிறந்த மாணவன் விருதும் பூபாவிற்கு தான் வழங்கப்பட்டதாம். வகுப்புகள் மட்டுமின்றி பள்ளியில் நடைபெறும் விளையாட்டுப் போட்டி, கலைநிகழ்ச்சிகள் எதையும் பூபா ‘மிஸ்’ செய்வதே இல்லை என ஆம்பர் மரியந்தால் பூரிப்புடன் கூறுகிறார்.
Average Rating