யுத்தநிறுத்த அமுலுக்குப் பின் 207 புளொட் உறுப்பினர்கள் புலிகளால் சுட்டுக்கொலை!!
சிறீலங்கா அரசுக்கும் புலிகள் இயக்கத்திற்கும் இடையே யுத்தநிறுத்தம் அமுலுக்கு வந்த காலத்திலிருந்து இதுவரையில் புலிகள் இயக்கத்தினர் புளொட் எனப்படும் தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பைச் சேர்ந்த 207 உறுப்பினர்களைப் படுகொலை செய்திருப்பதாகவும் இந்தப் படுகொலைகளுக்கு சர்வதேச யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவே முற்றிலும் பொறுப்பு எனவும் அரசாங்கத்துக்கு “புளொட்” அமைப்பின் சிரேஷ்ட உத்தியோகத்தர் அறிவித்துள்ளார். இதுபற்றி மேலும் அரசுக்கு புளொட் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் முறைப்பாட்டிற்கேற்ப மேற்படி யுத்தநிறுத்தம் அமுலுக்கு வந்த பின்னர் சிறீலங்கா அரசு புளொட் அமைப்பினர் தமது பாதுகாப்புக்காக வைத்திருந்த ஆயுதங்களை மீண்டும் வாங்கிக் கொண்டனர் எனவும் ஆயினும் புலிகள் இயக்கத்தினர் ஆயுததாரிகளாகவே செயற்பட அனுமதிக்கப்பட்டனர் எனவும் இதன் காரணமாகவே புளொட் அமைப்பினர் இவ்வாறு புலிகள் இயக்கத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலை ஏற்பட்டதாகவும் மேற்படி புளொட் சிரேஷ்ட உத்தியோகத்தர் அரசாங்கத்துக்குச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், கடந்த 6 ஆம் திகதி வவுனியாவில் வைத்து புளொட் அமைப்பின் சிதம்பரம் அல்லது ரஞ்ஜன் எனப்படும் முக்கிய உறுப்பினர் புலிகள் இயக்கத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே புளொட் இயக்க சிரேஷ்ட உறுப்பினர் இவ்வாறு அரச தரப்புக்கு கடந்த 7 ஆம் திகதி அறிவித்துள்ளார். மேலும், இவ்வாறு யுத்தநிறுத்தம் அமுலுக்கு வந்த பின்னர் ஆயுதங்கள் பறிக்கப்பட்டதால் புளொட் அமைப்பினருக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தான நிலைபற்றி புளொட் இயக்கத் தலைமைத்துவம் ஜனாதிபதிக்கும் அரச பாதுகாப்புத்துறை உயரதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளது. மேலும், இப்பாதுகாப்பற்ற சூழ்நிலையில் புளொட் உறுப்பினர்கள் புலிகளால் கொல்லப்படும் சம்பவங்கள் அடிக்கடி தொடர்ந்து நிகழ்ந்துவருவதாகவும் புளொட் அமைப்பின் ஆயுதங்கள் பறிக்கப்பட்ட பின்னர் முற்றிலும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாகவும் புளொட் அமைப்பின் தரப்பில் மேற்படி சிரேஷ்ட புளொட் உறுப்பினர் வவுனியாவிலிருந்து ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளார்.