தமிழ்ச்செல்வனுக்குப் பிரபாகரன் “மாமனிதர்” கௌரவம் வழங்காதது ஏன்?
புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனுக்கும் புலிகளின் உளவுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மானுக்கும் இடையே நெடுங்காலம் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாகவும் அதன் பின்னணியிலேயே தமிழ்ச்செல்வனின் நடமாட்டம் தங்குமிடம் பற்றிய தகவல்களை பொட்டு அம்மானின் குழுவினர் பாதுகாப்புப் புலனாய்வுத் தரப்புக்கு அறிவித்ததைத் தொடர்ந்து குறித்த நிலையம் மீது விமானத்தாக்குதல் நடத்தப்பட்டு தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வன்னிப் பகுதியிலிருந்து முன்னர் வெளியாகியிருக்கும் நிலையில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், தமிழ்ச்செல்வன் சம்பந்தப்பட்ட மற்றுமொரு தகவலும் வன்னித் தமிழர்கள் வட்டாரங்களிலிருந்து வெளியாகியுள்ளது. இதற்கேற்ப விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ்ச்செல்வனுக்குத் தலைவர் பிரபாகரன் புலிகள் இயக்கத்தால் வழங்கப்படும் உயர்கௌரவ விருதாகிய “மாமனிதர்” பட்டத்தை இதுவரையில் வழங்கவில்லை என்ற தகவல் வன்னித் தமிழரிடையே பரவி வருவதுடன், இவ்வாறு தமிழ்ச்செல்வனைப் பிரபாகரன் மாமனிதராகக் கௌரவிக்காதது பற்றிய பல்வேறு கருத்துகளும் சந்தேகங்களும் கிளப்பப்பட்டுள்ளன. ஏற்கனவே புலிகள் இயக்கத்தின் ஆலோசகரும் பேச்சாளருமாக முன்னர் செயற்பட்ட அன்ரன் பாலசிங்கம், சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார் பொன்னம்பலம், சந்திரநேரு மற்றும் அவஸ்திரேலியாவில் புலிகள் இயக்கத்தின் முகவராக செயற்பட்ட ஜெயகுமார் ஆகியோருக்கு புலிகள் இயக்கத்துக்காக அவர்கள் ஆற்றிய செயற்பாடுகளைக் கௌரவித்து “மாமனிதர்” விருதை வழங்கியிருந்தார். இந்த விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானத்தை எடுப்பவர் தலைவர் பிரபாகரனே. ஆயினும், நீண்டகாலம் புலிகள் இயக்கத்தில் ஆயுதப்படைத் தலைமைப் பொறுப்புகளிலும் அரசியல் பிரிவுத் தலைமைப் பொறுப்பிலும் இருந்து சேவை செய்த தமிழ்ச்செல்வனுக்கு “மாமனிதர்” விருதை வழங்கும் தீர்மானத்தைப் பிரபாகரன் இதுவரையில் எடுக்காமலே உள்ளார். இந்த வகையில் தமிழ்ச்செல்வனுக்கு ஏற்கனவே “பிரிகேடியர்’ என்ற பதவிப் பெயர் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. அன்ரன் பாலசிங்கம் காலமான போது அவருடைய சேவையைக் கௌரவித்து உடனேயே அவருக்குத் “தமிழ் இனத்தின் குரல்’ பட்டத்தையும் பிரபாகரன் வழங்கியிருந்தார். ஆயினும், உயர்பொறுப்புகளில் நீண்டகாலம் புலிகள் இயக்கத்துக்குச் சேவை செய்த தமிழ்ச்செல்வனுக்கு இதுவரை எந்தவொரு பட்டமோ விருதோ கிடைக்கவில்லை. இதுபற்றி வன்னித் தமிழர் வட்டாரங்களில் தெரிவிக்கப்படும் தகவல்களுக்கேற்ப கொல்லப்பட்ட இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவருக்கு இறுதி கௌரவத்தைச் செலுத்துவதற்கு பிரபாகரனின் மனைவி மதிவதனியும் சமுகமளிக்கவில்லை என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.