பிரபாகரனின் பாதுகாப்பாளராக கபில் அம்மான் அகற்றப்பட்டு அவருக்குப் பதிலாக இம்ரான் பாண்டே அல்லது கடாபி நியமிக்கப்பட்டார்!!
புலிகள் இயக்க அரசியற் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பைப் பலப்படுத்த புலிகள் இயக்கத் தலைமைத்துவம் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வன்னிப் பிரதேச பாதுகாப்புப் படை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவல்களின்படி தமிழ்ச்செல்வன் உயிரிழந்ததைத் தொடர்ந்து பிரபாகரனின் பாதுகாப்பு சம்பந்தமாகவும் பிரச்சினைகள் எழுந்துள்ளதையே தலைவரின் பாதுகாப்பு பலப்படுத்தல் நடவடிக்கை எடுத்துக் காட்டியுள்ளதாகத் தெரிகிறது. இதற்கேற்ப இதுவரை பிரபாகரனின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்தவரும் புலிகள் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவருமான கபில் அம்மான் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பாளர் பதவியிலிருந்து அகற்றப்பட்டு அவருக்குப் பதிலாக இம்ரான் பாண்டே அல்லது கடாபி என அழைக்கப்படும் மற்றுமொறு முன்னணி ஆயுதப் படைப்பிரிவுத் தலைவர் நியமிக்கப்பட்டிருப்பது பற்றிய தகவல் வன்னித் தகவல் வட்டாரங்களிலிருந்து வெளியாகியிருப்பதாக வன்னிப் பாதுகாப்புத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதன் பின்னர் புலிகள் இயக்கத்தில் பல்வேறு உட்பூசல்கள் எழுந்துள்ளதாகவும், அத்துடன் தமிழ்ச்செல்வனுக்குப் பின் அரசியற் பிரிவுத் தலைவராக புலிகளின் பொலிஸ் பிரிவுத் தலைவர் நடேசன் நியமிக்கப்பட்டது சம்பந்தமாக இயக்கத்துக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருவதாக வடபகுதித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு நடேசன் அரசியற் பிரிவுத் தலைவராக நியமிக்கப்பட்டது சம்பந்தமாக தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவான குழு உறுப்பினர்கள் எதிர்ப்புக் காட்டி வருவதாகவும் மேலும் குறித்த வடபகுதித் தகவல்களிலிருந்து தெரிய வருவதாக பாதுகாப்புத்துறைத் தரப்பில் கூறிப்பட்டுள்ளது.