குளச்சல் அருகே பாரதீய ஜனதா நிர்வாகியை வெட்டிய மர்ம கும்பல்…!!
குளச்சல் அருகே உள்ள உதியாவிளையில் வசிப்பவர் முருகன் (வயது 58). இவர் பாரதீய ஜனதா கட்சியின் குமரி மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். மேலும் குளச்சல் மெயின் ரோட்டில் தையல் கடையும் நடத்தி வருகிறார்.
நேற்றிரவு முருகன் தனது கடையை பூட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். உதியாவிளை சானல் கரை பகுதியில் அவர், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று இன்றொரு மோட்டார் சைக்கிள் அவரை வழி மறித்தது.
இதனால் முருகன் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். உடனே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் முருகனை சுற்றி வளைத்துக் கொண்டு தங்கள் கைகளில் இருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள்.
இதனால் படுகாயம் அடைந்த முருகன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே சாய்ந்தார். உடனே அந்த கும்பல் முருகனின் மோட்டார் சைக்கிளை சானலில் தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது. முருகனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிச்சென்று அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாரதீய ஜனதா பிரமுகர் நடுரோட்டில் வெட்டப்பட்ட தகவல் கிடைத்ததும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அங்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் குளச்சல் போலீசாரும் அங்கு சென்று விசாரித்தனர்.
பாரதீய ஜனதா பிரமுகர் வெட்டப்பட்ட இடம் மின் விளக்கு இல்லாமல் இருள் சூழ்ந்த இடமாகும். அவரை வெட்டிய கும்பல் அந்த இடத்தை திட்டம் போட்டு தேர்ந்தெடுத்து தங்கள் சதி செயலை அரங்கேற்றி உள்ளது.
அந்த கும்பல் எதற்காக இந்த செயலில் ஈடுபட்டது. எத்தனை பேருக்கு இதில் தொடர்பு உள்ளது என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் உதியாவிளை பகுதியில் பதட்டம் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Average Rating