குமாரபாளையம் அருகே சலவை தொழிலாளி கொலை…!!
குமாரபாளையம் அருகே உள்ள அரவங்காடு பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவரது மகன் கோவிந்தன்(வயது 35). சலவை தொழிலாளி. இவருடைய மனைவி ராசாத்தி(வயது 28). இவர்களுக்கு பிரமோத் என்ற 4 வயதில் மகன் உள்ளான்.
இந்த நிலையில் கோவிந்தனுக்கு மதுகுடி பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. எல்லாவிதமான கூலி வேலைகளுக்கும் சென்று வருவார்.
நேற்று இரவு தனது மனைவி ராசாத்தியிடம் குமாரபாளையத்தில் உள்ள தியேட்டரில் சினிமா பார்த்து விட்டு வருவதாக கூறிச் சென்றார்.
இன்று காலை குமாரபாளையம் காவிரி தியேட்டர் முன்புறம் உள்ள சாலையில் (பள்ளிப் பாளையத்திற்கு செல்லும் சாலை) தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
அவரை யாரோ நள்ளிரவில் கொலை செய்துள்ளனர். பெரிய கல்லை தலையில் தூக்கிப் போட்டு கொலை செய்துள்ளனர். கோவிந்தன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை இன்று காலையில் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவிந்தன் தலைக்கு அருகில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கல் கிடந்தது. இந்த கல் சுமார் 10 கிலோ அளவு எடை கொண்டதாகும்.
இந்த கல்லை பயன்படுத்தி அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே அந்த கல்லை போலீசார் பார்வையிட்டனர். மேலும் சம்பவ இடத்தில் கொலையாளிகள் வேறு ஏதேனும் தடயங்களை விட்டு சென்றுள்ளனரா என போலீசார் தேடினர். சம்பவம் நடந்த இடத்தை சுற்றில் உள்ள கடைகள் மற்றும் ஏதாவது ஒரு பகுதியில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளதா? என ஆய்வு மேற் கொண்டனர்.
கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டிருந்தால் கொலையாளிகளின் உருவம் அதில் பதிந்திருக்கும். எனவே அதனை வைத்து கொலையாளிகளை எளிதில் கைது செய்து விடாலம் என போலீசார் கருதி, போலீசார் அந்த பகுதியில் ஏதேனும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து வருகிறார்கள்.
கோவிந்தன் அண்ணன் முருகாணந்தம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள். தொழிலாளி எதற்கு கொலை செய்யப்பட்டார்? என்ன காரணம் ? என்பன போன்ற விபரங்கள் உடனடியாக கிடைக்க வில்லை.
கோவிந்தன் சம்பவத்தன்று மது அருந்தினாரா? அப்போது ஏற்பட்ட வாக்கு வாதத்தில் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கணவர் கொலை செய்யப்பட்டுள்ளதை கேள்விப்பட்டதும் மனைவி ராசாத்தி மருத்துவமனைக்கு சென்று கோவிந்தன் உடலை பார்த்து கதறி அழுதார். மேலும் அவரது உறவினர்கள் மருத்துவமனையில் கூடியுள்ளனர்.
இச்சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating