பேருந்தில் ஏற முயன்ற பெண் தவறி கீழே விழுந்தபோது சாவு
மதுராந்தகம் பஸ் நிலையத்தில் பேருந்தில் ஏற முயன்ற பெண் தவறி கீழே விழுந்தபோது பின்னால் வந்தவர்கள் மிதித்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். உத்திரமேரூர் ஒழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம். இவரது மனைவி சகுந்தலா (வயது 45). இவர் மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக காத்துக் கொண்டு இருந்தார். நீண்ட நேரம் கழித்து ஒரே ஒரு பேருந்து வந்தது. அதில் ஏறுவதற்காக சகுந்தலா விரைந்து சென்றார். படிக்கட்டில் ஏறும் போது கால்தவறி சகுந்தலா கீழே விழுந்தார். கூட்ட நெரிசலில் முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் ஏறியவர்கள் சகுந்தலா கீழே விழுந்திருப்பதை கவனிக்காமல் அவரை மிதித்துக் கொண்டு பேருந்துக்குள் ஏறி சென்றனர். பின்னர் படுகாயம் அடைந்து மூச்சுவிட சிரமப்பட்டுக் கொண்டி ருந்த சகுந்தலாவை போலீசார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சகுந்தலா உயிரிழந்தார். இதுகுறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.