மதுரையில் இன்று தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்…!!
மதுரை காமராஜர் சாலையில் தனியார் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இன்று காலை மதுரை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த ‘மர்ம’ நபர் இந்த பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கிறது என்றும், அது சற்று நேரத்தில் வெடிக்கும் என்றும் கூறிவிட்டு துண்டித்து விட்டான்.
இது குறித்து தெப்பக் குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தெப்பக்குளம் போலீசார், வெடிகுண்டு கண்டுபிடிப்பு பிரிவு போலீசாருடன் பள்ளிக்கு விரைந்து வந்தனர்.
மெட்டல் டிடெக்டர் கருவியுடன் போலீசார் ஒவ்வொரு வகுப்பறைகளாக சென்று சோதனை நடத்தினர். பள்ளி வளாகம் முழுவதும் நடந்த இந்த சோதனையால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. வகுப்புகள் தொடங்கும் முன்பே வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் உடனடியாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் பள்ளிக்கு வந்த மாணவ–மாணவிகள் வீடு திரும்பினார்கள்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ‘மர்ம’ நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating