கோவை அரசு ஆஸ்பத்திரியில் தொழிலாளி தொடையில் கத்திரிக்கோல் வைத்து தைத்ததாக பரபரப்பு: டாக்டர்கள் விளக்கம்…!!
கோவை–திருச்சி சாலையில் உள்ள கள்ளிமடையை சேர்ந்தவர் கருப்பசாமி(வயது 60). சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் சைக்கிளில் சென்ற போது எதிரே வந்த வாகனம் மோதியதில் இவர் படுகாயமடைந்தார். உடனடியாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருக்கு தொடையில் ஆபரேஷன் செய்யப்பட்டது. இந்தநிலையில், ஆபரேஷன் செய்த போது தவறுதலாக கருப்பசாமியின் தொடையில் கத்திரிக்கோலை வைத்து தைத்து விட்டதாக வாட்ஸ்அப்பில் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இதனை ஆஸ்பத்திரி மருத்துவர்கள் மறுத்துள்ளனர்.
இதுதொடர்பாக ஆஸ்பத்திரி சூப்பிரண்டு அசோகன், ஆர்.எம்.ஓ.சவுந்திரவேலு ஆகியோர் இன்று கூறியதாவது:– கருப்பசாமியின் தொடையில் கத்திரிக்கோல் வைத்து தைத்ததாக கூறுவது தவறானது. பொதுவாக ஆபரேஷன் நேரத்தில் நோயாளியின் மேல் துணி போட்டு அதை கிளிப்பால் மூடியிருப்பார்கள். அதன்மேல் துணி போட்டு எக்ஸ்ரே எடுக்கும் போது சிறிய கிளிப் கூட உடலுக்குள் கத்திரிக்கோல் வைத்து தைத்தது போலத்தான் காட்டும். நோயாளிக்கு வயது அதிகமாகி விட்டதால் முதல் ஆபரேஷன் போது வைக்கப்பட்ட ஸ்குரூ சரியாக பொருந்தாமல் மீண்டும் ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டியதாயிற்று. இதைத்தான் யாரோ தவறாக புரிந்து கொண்டு 2–வது ஆபரேஷன் செய்து கத்திரிக்கோலை எடுத்து விட்டார்கள் என பொய்யான தகவலை பரப்பி விட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Average Rating