ஸ்டான்லி மர்ம காய்ச்சல்
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி விடுதியில் மீண்டும் மர்மக்காய்ச்சல் தாக்கி 3 பயிற்சி மாணவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த விடுதியில் தங்கியுள்ள மருத்துவ மாணவர் களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள், செவிலியர்கள் ஆகியோர் தங்கும் ஸ்டான்லி மருத்துவ கல்லூரி விடுதியில் திடீரென மர்ம காய்ச்சல் ஏற்பட்டு 30க்கும் மேற்பட்டவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட கரீமா என்ற 3ம் ஆண்டு மருத்துவ மாணவி தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனைத் தொடர்ந்து அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ். எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுதிக்கு நேரில் வந்து பார்வையிட்டு தேவையான துப்புரவு பணிகளை உடனடியாக மேற்கொணடு விடுதியை தூய்மையாக வைத்திருக்க உத்தரவிட்டார்.
இதனை அடுத்து விடுதியில் முழு வீச்சில் துப்புரவுப் பணிகள் மேற் கொள்ளப்பட்டன. இதனையொட்டி 10 நாட்கள் விடுதிக்கு விடுமுறை விட்டு பின்னர் கல்லூரி திறக்கப்பட்டது. அப்போது விடுதியை சுற்றி கொட்டப்பட்டு கிடந்த குப்பைக் கூளங்களும், மருத்துவ கழிவுகளும் அகற்றப்பட்டன. குடிநீரும் பரிசோதிக்கப்பட்டு சப்ளை செய்யப்பட்டது. இதன் காரணமாக மர்ம காய்ச்சல் பாதிப்பு முடிவுக்கு வந்தது. தற்போது மீண்டும் விடுதியை சுற்றி குப்பைக் கூளங்கள் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், விடுதியில் தங்கியுள்ள 3 பேருக்கு மீண்டும் மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை பயிற்சி டாக்டர் சசிதரன் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட அந்த 3 பேரும் உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மீண்டும் மர்ம காய்ச்சல் வந்திருப்பதால் ஸ்டான்லி மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.