செய்யாறு அருகே சுடு தண்ணீர் மீது விழுந்து 4 வயது சிறுமி சாவு..!!
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகள் விஜயதர்ஷினி (வயது 4). அங்குள்ள பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறார். தற்போது காலாண்டு பரீட்சை விடுமுறையின் போது செய்யாறு அருகே குன்னத்தூரில் உள்ள பாட்டி காமாட்சி வீட்டுக்கு விஜயதர்ஷினி வந்திருந்தார்.
சம்பவத்தன்று அவர் பாட்டி வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்தார். அங்கு ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைக்கப்பட்டு இருந்தது.
ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்த விஜயதர்ஷினி எதிர்பாராத விதமாக சுடுதண்ணீர் வைக்கப்பட்டு இருந்த பாத்திரத்தின் மீது விழுந்தார். இதில் சுடுதண்ணீர் கொட்டி சிறுமியின் மார்பு மற்றும் உடல் பகுதியில் பட்டது.
இதில் மார்பு, உடல் பகுதி வெந்தது. படுகாயம் அடைந்த விஜயதர்ஷினி அலறி துடித்தார். வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் இல்லாமல் விஜயதர்ஷினி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மோரணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating