துபாயில் மேம்பாலம் இடிந்ததால் பலியான உடல்கள் சென்னை வந்தன
துபாயில் மேம்பாலம் இடிந்ததால் பலியான தமிழர்களில் 3 பேரின் உடல்கள் நேற்று அதிகாலை சென்னைக்குக் கொண்டுவரப் பட்டன. இங்கிருந்து ஆம்புலன்ஸ் வாகனங்களில் அவர்களின் சொந்த ஊர்களுக்கு உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டது. வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாயில் நடைபெறும் கட்டுமானப் பணிகளில் ஏராளமான தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர். துபாயில் மரினா பகுதி சுபோக் சாலையில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. கடந்த 9ம் தேதி நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென்று பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அதில் 7 பேர் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்தனர். பலியானவர்களில் 5 பேர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் அவர்களின் குடும்பங் களுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்ததோடு, ஒவ்வொரு குடும் பத்திற்கும் 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த நிலையில், பலியானவர்களில் 3 தமிழர்களின் உடல்கள் எமிரேட்ஸ் ஏர்வேஸ் விமானம் மூலம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அந்த உடல்களுடன் மேம்பால கட்டுமான நிறுவனத்தின் மூன்று பிரதிநிதிகளும் வந்தனர். சென்னைக்கு கொண்டு வரப்பட்ட வர்கள் பற்றிய விவரம் வருமாறு: கார்த்திகேயன் தங்கம் (வயது 32), திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள மூங்கில்பட்டியைச் சேர்ந்தவர்.
மதியழகன் ராமலிங்கம் (வயது 28), பி.ஏ. பட்டதாரியான இவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள காவாரப்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். அருள் மொழி (வயது 27), கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்த மூவரின் உடல்களும் ஆம்புலன்ஸ் வாகனங்களில் அவரவர் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒவ்வொரு வாகனத்திலும் கட்டுமான நிறுவனத்தின் பிரதிநிதியும் சென்றார்.