நவாசுடன் பேசத் தயார்: புட்டோ
பாகிஸ்தானில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக நவாஸ் ஷெரீப்புடன் இணைந்து செயல்படும் வகையில் அவருடன் பேசத் தயாராக இருப்பதாக பெனாசிர் புட்டோ கூறியுள்ளார். பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு எதிராக ஒருங்கிணைந்த கூட்டணி ஒன்றை அமைக்க நவாஸ் ஷெரீப்பை கேட்டுக் கொள்ளப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வீட்டுக் காவலில் உள்ள அவர், தொலைக்காட்சி ஒன்றுக்கு தொலைபேசி மூலம் அளித்துள்ள பேட்டியில், நவாஸ் ஷெரீப்புடன் பேசுவதற்காக தாம் இரண்டு முறை முயற்சி மேற்கொண்டதாகவும் ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், எனினும் மீண்டும் முயற்சிக்கப் போவதாகவும் கூறியுள்ளார். பாகிஸ்தானின் மிகப் பெரிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரான பெனாசிர் புட்டோ பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கடந்த இரண்டு தினங்களாக பேசி வருவதாக அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே நாடு கடத்தப்பட்டு சவூதி அரேபியாவில் தங்கியிருக்கும் நவாஸ் ஷெரீப், முஷாரப்புக்கு எதிராக பெனாசிர் புட்டோவுடன் கைகோர்க்க இருக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் ஜனநாயக ஆட்சி மீண்டும் மலர பெனாசிருடன் உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள தொலைபேசி பேட்டியில் ஷெரீப் கூறியுள்ளார்.