வாஜ்பாயுடன் பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பு…!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து இந்தியஅமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். டெல்லி கிருஷ்ணமேனன் சாலையில் உள்ள வாஜ்பாய் இல்லத்திற்கு சென்ற பிரதமர் மன்மோகன் சிங் அவருடன் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது பிஜேபி மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான எல்.கே.அத்வானி உடனிருந்தார். இந்த சந்திப்பின் போது பிரதமர் மன்மோகன் சிங், வாஜ்பாயுடன் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகள் மற்றும் இந்தியஅமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக விவாதித்ததாக பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் சஞ்சையா பாரூ நிருபர்களிடம் தெரிவித்தார். இந்தியஅமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிஜேபி வலியுறுத்தி வரும் நிலையில் வாஜ்பாயுடன் பிரதமர் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சந்திப்பின் போது வாஜ்பாயின் உடல்நலம் குறித்து பிரதமர் விசாரித்ததாகவும் அவருக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே இந்த சந்திப்பின் போது பிஜேபி தலைவர்கள் அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லையென்பதை தெளிவுபடுத்தியதாக பிஜேபி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.