கணவரின் குடிபழக்கத்தால் குழந்தைகளை கொன்றேன்: தற்கொலைக்கு முயன்ற பெண் வாக்குமூலம்..!!
கீழ்பாக்கம் பர்னபி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சந்தோஷ். ராஜஸ்தானைச் சேர்ந்த இவர் சென்னையில் நீண்ட காலமாக குடியிருக்கிறார். ரெயில்வேயில் பார்சல் அனுப்பும் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரது மனைவி மம்தா (35). இவர்களுக்கு யாஷி (14) என்ற மகளும், அனுஷ் (7) என்ற மகனும் உள்ளனர். கணவன் மனைவியிடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.
நேற்று முன்தினமும் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. மனைவியை திட்டி விட்டு சந்தோஷ் வெளியே சென்று விட்டார்.
இதனால் வேதனை அடைந்த மம்தா தனது குழந்தைகள் யாஷி, அனுஷ் ஆகியோருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்தார். பிறகு தானும் அந்த விஷத்தை குடித்தார்.
இரவு வீடு திரும்பிய சந்தோஷ் மனைவி குழந்தைகள் மூச்சு பேச்சில்லாமல் மயங்கி கிடந்ததை கண்டு பதறி துடித்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 3 பேரையும் கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் யாஷி, அனுஷ் ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மம்தாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரது உடல் நிலை தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளது. கணவரின் குடிப்பழக்கத்தினால் குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்றதாக மம்தா போலீசில் வாக்குமூலம் அளித்தார். அவர் கூறியதாவது:–
கடந்த சில நாட்களாகவே எனது கணவர் குடித்து விட்டு வீட்டுக்கு வருவார். அவரது குடிப்பழக்கத்தால் எங்களது குடும்பத்தின் மகிழ்ச்சி குறையத் தொடங்கியது. இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று இரவும் என் கணவர் குடித்து விட்டு வந்தார்.
தட்டிக் கேட்ட என்னை அவர் திட்டினார். மறுநாள் என்னுடன் பேசாமல் வெளியே சென்று விட்டார். நான் செல்போனில் தொடர்பு கொண்டும் அவர் பேசவில்லை. இதனால் விரக்தி அடைந்த நான் தற்கொலை செய்ய முடிவு செய்தேன்.
நான் இறந்தால் குழந்தைகள் அனாதையாகிவிடும் என்று கருதி அவர்களுக்கும் உணவில் விஷம் கலந்து கொடுத்து நானும் விஷம் குடித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மம்தாவை கைது செய்த கீழ்ப்பாக்கம் போலீசார் அவர் மீது கொலை மற்றும் தற்கொலை முயற்சி போன்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating