திருப்பதியில் அனாதையாக தவிக்கும் 2 வயது தமிழக சிறுவன்: பேச்சு வராததால் பெற்றோர்களே விட்டுச்சென்ற பரிதாபம்..!!
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே அகிலாண்டம் பகுதியில் நேற்று 2 வயது சிறுவன் அழுதுக்கொண்டு இருந்தான்.
தேங்காய் விற்கும் வியாபாரிகள் சிறுவனை மீட்டு திருமலை போலீசில் ஒப்படைத்தனர். சிறுவனுக்கு பேச்சு வரவில்லை. தெலுங்கில் பேசினால் தெரியாமல் முழிக்கும் அவன் தமிழில் பேசினால் புரிந்து கொள்கிறான்.
எனவே அவன் தமிழகத்தை சேர்ந்தவனாக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். பெற்றோர்கள் குழந்தையை தவற விட்டு இருக்கலாம் என்று கருதி போலீசார் மைக் மூலம் அறிவித்தனர். ஆனால் யாரும் போலீஸ் நிலையம் வரவில்லை. அதோடு குழந்தை மாயமானதாக புகாரும் தெரிவிக்கவில்லை.
இதனால் பெற்றோர்களே குழந்தையை அனாதையாக விட்டு சென்று இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. குழந்தைக்கு பேச்சு வராததால் இவ்வாறு விட்டுச்சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
இன்று வரை சிறுவனுக்கு சொந்தம் கொண்டாடி யாரும் வராவிட்டால் அவனை சித்தூரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே போல் முடி காணிக்கை செலுத்தும் கல்யாண கட்டாவில் 1 வயது ஆண் குழந்தையை பெற்றோர்கள் அனாதையாக விட்டு சென்றனர்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த அந்த குழந்தையை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்
Average Rating