குழந்தை குளத்தில் மூழ்கியபோது செல்போனில் மூழ்கியிருந்த தாய்க்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை…!!
இங்கிலாந்தில் குழந்தை குளத்தில் மூழ்கி இறந்ததைக்கூட கவனிக்காமல், செல்போனில் சமூக வலைத்தளத்தை பார்த்துக்கொண்டிருந்த அக்குழந்தையின் தாய்க்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு யார்க்க்ஷயர் கவுண்டியின் பெவர்லியில் வசித்து வருபவர் கிளேர் பார்னெட் (வயது 31). இவர் கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 17-ம் தேதி தனது இரண்டு வயது ஆண் குழந்தை ஜோசுவாவை வீட்டின் தோட்டத்தில் விளையாட விட்டிருந்தார். தோட்டத்தில் அங்குமிங்கும் ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்த ஜோசுவா, திடீரென அங்குள்ள சிறிய குளத்தில் தவறி விழுந்து இறந்துவிட்டான்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அலட்சியமாக இருந்ததாக பார்னெட்டை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். விசாரணையில், அந்தக் குழந்தை குளத்தில் மூழ்கி இறந்தபோது, தாய் கிளேர் பார்னெட் தனது செல்போனில் சமூக வலைத்தளங்களை பார்த்துக்கொண்டிருந்தது தெரியவந்தது. தான் கவனக்குறைவாக இருந்ததை பார்னெட்டும் ஒப்புக்கொண்டார்.
ஹல் கிரவுன் கோர்ட்டில் நடைபெற்றுவந்த இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பார்னெட்டுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
Average Rating