நடிகர் சங்கத் தலைவர் ஆனார் சரத்குமார்
தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக நடிகர் சரத்குமார் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். நடிகர் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் தேர்வு நடக்கும். அதன்படி வருகிற 30ம் தேதி அடுத்த மூன்று ஆண்டுகள் யார் வசம் நடிகர் சங்க நிர்வாகம் இருக்கப் போகிறது என்பதை முடிவு செய்யும் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், நல்லதம்பி தலைமையில் இன்னொரு அணியும் போட்டியில் குதித்தனர்.
சரத் அணியில் தலைவர் பதவிக்கு சரத்குமாரும், 2 துணைத் தலைவர் பதவிக்கு விஜயக்குமார், மனோரமா ஆகியோரும், ஒரு செயலாளர் பதவிக்கு ராதாரவியும், பொருளாளர் பதவிக்கு கே.என்.காளையும் களம் கண்டுள்ளனர்.
இதில் தலைவர் பதவிக்கு சரத்குமார் தவிர கடைசி நிமிடத்தில் நடிகர் நாசரும் போட்டியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளன்று நாசர் தனது மனுவை வாபஸ் பெற்றார்.
நேற்றுடன் மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். இதைத் தொடர்ந்து சரத்குமார் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 30ம் தேதி வெளியிடப்படும்.
துணைத் தலைவர் பதவிக்கு விஜயக்குமார், மனோரமா, தமிழ்ச் செல்வி, கோபாலகிருஷ்ணன், செண்பகமுத்து ஆகிய 4 பேரும், செயலாளர் பதவிக்கு ராதாரவி, மன்சூர் அலிகான், எம்.ஏ.பிரகாஷ் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு கே.என்.காளை, நல்லதம்பி ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
24 உறுப்பினர்களைக் கொண்ட செயற்குழுவுக்கு, மொத்தம் 47 பேர் போட்டியில் உள்ளனர். இதனால் தலைவர் பதவி தவிர மற்ற அனைத்துப் பதவிகளுக்கும் 30ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் சரத்குமார் அணியே பெருவாரியாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.