தென்னாபிரிக்காவிற்கு செல்கிறது இலங்கையின் உயர்மட்டக் குழு…!!
நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பாக ஆராய இலங்கை அரசின் உயர் மட்டக் குழுவொன்று அடுத்த வாரம் தென்னாபிரிக்கா செல்லவுள்ளது.
தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி ஒழிக்கப்பட்ட பின்னர், அமைக்கப்பட்ட உண்மை, நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளவே அரசாங்கத்தின் உயர் மட்டக்குழு அங்கு செல்லவுள்ளது.
இலங்கையில் உருவாக்கப்படவுள்ள இந்த உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவில், மதத் தலைவர்களைக் கொண்ட ஒரு கருணைசச் சபையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடுகளை வழங்குவதற்கான ஒரு குழுவும் அமைக்கப்படவுள்ளன.
அத்துடன் இந்த உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு உட்பட்டே காணாமற்போனோரைக் கண்டுபிடிப்பதற்கான நிரந்தர பணியகமும் அமைக்கப்படவுள்ளது.
மேலும், காணாமற்போனோர் குறித்த பணியகத்துக்கு அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் ஆலோசனையும் பெறப்படவுள்ளது. இதுகுறித்த பேச்சுக்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவையும், அதன் கீழ் அமைக்கப்படும் பொறிமுறைகளையும் உருவாக்குவது தொடர்பான சட்டமூலங்கள், அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை முன்னதாக, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
Average Rating