தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை முடக்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கான இலங்கையின் நன்றியைத் தெரிவித்தார் அமைச்சர் ரோஹித்த!
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை முடக்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கான இலங்கை அரசாங்கம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று காலை பாராளுமறத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தியபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது: உலகம் முழுவதிலும் நிதி திரட்டி எல்.ரீ.ரீ.ஈ.யினருக்கு ஆயுதம் விநியோகிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வந்தமையே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு எதிரான முக்கியமான குற்றச்சாட்டாகும். எனவே வேறு ஒரு பெயரிலோ அல்லது புதிதாகவோ மீண்டும் இயங்க முடியாதபடி இந்த அமைப்புக்கு அமெரிக்க அரசாங்கம் தடை விதித்துள்ளது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயற்பாடுகளை கவனித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு நான் அமெரிக்கா சென்றிருந்தபோது அமெரிக்க திறைசேரி அதிகாரிகளிடம் கோரினேன். எனது கோரிக்கைக்கு மதிப்பளித்து அவர்கள் செயற்பட்டுள்ளனர். அந்த அமைப்பின் 2006 ஆம் ஆண்டின் கொடுக்கல் வாங்கல்கள் பற்றி ஆராய்ந்த பின்னரே பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே எல்.ரீ.ரீ.ஈ.யினருக்கு எதிராக நடவடிக்கை எடுத்த முதலாவது அமெரிக்க நிறுவனமாக அந்த நாட்டின் திறைசேரி விளங்குகின்றது. அமெரிக்காவிலும் கனடாவிலும் 2006 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 16 புலிகள் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கும் போர்வையிலேயே அவர்கள் நிதி சேகரிப்பு நடவடிக்கைளில் ஈடுபடுகின்றனர் என்றும் அமைச்சர் கூறினார்.
அதைத் தொடர்ந்து ஜே.வி.பி. பாராளுமன்றக் குழுக்களின் தலைவர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில், அமெரிக்காவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டது போல் இலங்கையிலும் அந்த அமைப்பின் சொத்துக்கள் முடக்கப்பட வேண்டும். அத்துடன் அந்த அமைப்பபையும் எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பையும் அரசாங்கம் தடைசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம விமல் வீரவன்சவின் கோரிக்கையில் எவ்வித விவாதத்துக்கும் இடமில்லையென்றும் எல்.ரீ.ரீ.ஈ. மற்றும் டீ.ஆர்.ஒ. ஆகிய அமைப்புக்களுக்கு உதவும் நிறுவனங்களுக்கு வந்து குவியும் நிதிகளைத் தடுத்து நிறுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.