ஆப்கானிஸ்தானில் நொறுங்கி விழுந்த ஹெலிகொப்டர்: நேட்டோ படை வீரர்கள் 5 பேர் பலி…!!
நேட்டோ படையினருக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஆப்கானிஸ்தானில் நொறுங்கி விழுந்ததில் 5 வீரர்கள் மரணமடைந்தனர்.
நேட்டோ படையில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட 28 நாடுகளின் ராணுவ வீரர்கள் இடம்பெற்று உள்ளனர் .
கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடத்துவதற்காக நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தானில் தங்கி இருந்தனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து பெரும்பான்மையான நேட்டோ படையினர் வெளியேறிவிட்டனர்.
எனினும் இன்னும் 12 ஆயிரம் நேட்டோ வீரர்கள் அந்த நாட்டில் தங்கி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்க வீரர்கள் ஆவர். இவர்கள் தலீபான் தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிட ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காபூலில் உள்ள விமானப்படைத் தளத்தில் நேட்டோ படை வீரர்கள் 10பேருடன் இங்கிலாந்து ராணுவத்துக்கு சொந்தமான பூமா ரக ஹெலிகொப்டர் ஒன்று தரையிறங்க முயன்றபோது நொறுங்கி விழுந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே 5 வீரர்கள் பலியாயினர், மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் எந்தெந்த நாட்டு வீரர்கள் உயிரிழந்தனர் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.
அதேவேளையில் இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் தங்களது வீரர்கள் 2 பேர் பலியானதாக தெரிவித்து இருக்கிறது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
Average Rating