கேரளாவில் கணவரை வெட்டி கொன்றுவிட்டு குழந்தையுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை..!!
கேரள மாநிலம் மலப்புரம் அருகே மாறஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் பைசல் (வயது 35). இவர் துபாயில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி செலீனா (28). இந்த தம்பதிக்கு பாசில் என்ற 8 மாத குழந்தை இருந்தது.
நேற்று அதிகாலை பைசல் வீட்டு கிணற்றுக்குள் செலீனாவும், குழந்தை பாசிலும் உயிருக்கு போராடியபடி தண்ணீரில் தத்தளித்துகொண்டிருந்தனர். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சென்றனர்.
கிணற்றுக்குள் தாயும், குழந்தையும் தவித்துக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மேலும் அவர்களை மீட்கும் முயற்சியிலும் இறங்கினார்கள்.
தாயும், குழந்தையையும் காப்பாற்றி அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் தாயும், குழந்தையும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் பைசல் வீட்டிற்கு போலீசார் சென்று பார்த்தபோது அங்கு பைசல் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக செலீனா தனது கணவரை வெட்டி கொலை செய்துவிட்டு குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. ஆனாலும் போலீசார் இந்த சம்பவத்தில் வேறு ஏதும் மர்மம் உள்ளதா? என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating